நெல்லையில் நரேந்திர மோடி பேனர் கிழிப்பு - பாஜகவினர் மறியல்
நெல்லை: நெல்லையில் நரேந்திர மோடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தினர். இதை கண்டித்து பாஜவினர் மறியல் செய்ய முயன்றனர். இருப்பினும் அவர்களைப் போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
பாஜ கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி திருச்சியில் வரும் 26ம் தேதி நடைபெறும் இளம் தாமரை மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து பாஜக மற்றும் இந்து முன்னனி தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி மோடியை வரவேற்று மாநிலம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாநகரஙகளிலும் முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பேட்டை பழைய போலீஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த மோடி வரவேற்பு பேனரை இரவு மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இதை பார்த்து கொதிப்படைந்த பாஜகவினர் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் வக்கீல் அருள்ராஜ், பொது செயலாளர் குருசாமி உள்பட பாஜக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டையில் பாஜக கொடி கம்பம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இப்போது பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை கண்டித்து ஒரு தரப்பினர் பேனர் வைத்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications