ஆட்டோ டிரைவர் வீட்டுக்குபோன கையோடு, தெருவை கூட்டி பெருக்கிய தமிழிசை!
Recommended Video
சென்னை: ஆட்டோ டிரைவர் வீட்டுக்கே சென்று ஆறுதல் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்று கமலாலயத்தில் "தூய்மையே உண்மையான சேவை" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தெருவை, கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தார்.
இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்த போது, ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர் குறுக்கே வந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
தமிழிசையின் பின்னால் நின்று கொண்டிருந்த நிர்வாகிகள், அந்த ஆட்டோ டிரைவரை பின்னால் தள்ளி சென்று தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
குற்றச்சாட்டு
தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு பாஜக தான் பொறுப்பு என்று ஆட்டோ டிரைவர் கதிர், 'ஒன் இந்தியா தமிழுக்கு' அளித்த சிறப்பு பேட்டியில் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து கதிரை தாக்கிய பாஜகவினருக்கு எதிராக கடும் கண்டன குரல்கள் எழுந்தன.
|
ஆட்டோ ஓட்டுநருக்கு ஆறுதல்
இந்த நிலையில் நேற்று ஆட்டோ ஓட்டுநர் கதிர் வீட்டுக்கு நேராக சென்று தமிழிசை, அவரிடம் நலம் விசாரித்தார். இனிப்பு வழங்கி அவரை ஆறுதல்படுத்தினார். தெருக்கூத்து நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர் சகோதரர் கதிர் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடன் உரையாடினேன், என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டார் தமிழிசை.
திமுக பாணியில்
பிரியாணி கடைக்காரரை திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதையடுத்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின், பிரியாணி கடைக்கு நேரில் சென்று உரிமையாளரிடம் ஆறுதல் கூறினார். இந்த நிலையில், அதே பாணியில் தமிழிசையும் தனது கட்சியினரால் தாக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார்.
|
பெருக்கி சுத்தம்
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று தூய்மையே உண்மையான சேவை நிகழ்ச்சிக்காக சாலையை பெருக்கி சுத்தம் செய்து குப்பைகளை அள்ளினார். இது குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் தமிழிசை சௌந்தராஜன். இவரின் அடுத்தடுத்த அதிரடிகள் பாஜகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.