பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களே.. காங்- திமுக செய்த தப்பை பாஜக சரி செய்ய வேண்டியது தானே!
இப்போது பொங்கல் விடுமுறையையும் கடந்த ஆட்சி மீது பழி போட்டு தப்பிக்க ஆரம்பபித்துள்ளது பாஜக.
சென்னை: பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பொங்கல் விடுமுறை குறித்து எழுந்த குழப்பங்களுக்கு பதிலளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் மற்றும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
2008ம் ஆண்டு ஜூன் மாதம்தான் இந்த பட்டியல் திருத்தம் செய்யப்பட்டதாகவும், அதன்பிறகே 12 பண்டிகைகள் அகில இந்திய அளவில் பட்டியலிடப்பட்டு இந்த பண்டிகைகளுக்கு விடுமுறை, எந்தெந்த மாநிலங்களில் தேவையோ அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் ஊழியர்கள் கொண்ட நலக்குழு கூடி முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த வருடம் சனிக்கிழமை பொங்கல் விடுமுறை வருவதால் இந்த நலக்குழுதான், லீவை எடுக்காமல் விட்டுவிட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதில் என்ன கேள்வி என்றால் இது ஒரு அரசியல் பேட்டியாகத்தான் முடிந்ததே தவிர, தீர்வுக்கான தேடல் அதில் இல்லை. இப்படித்தான் காளையை காட்சி விலங்கு பட்டியலில் சேர்த்தது முந்தைய காங்கிரஸ்-திமுக ஆட்சியில்தான் என கூறி வருகிறார்கள் பாஜக தலைவர்கள். ஆனால் போன வருடம் ஜல்லிக்கட்டு நடத்தப்படாத சூழலில் ஓராண்டு கடந்தும் கூட அந்த சட்டத்தில் இதுவரை திருத்தம் கொண்டுவரவில்லை மத்திய அரசு. தமிழக அரசியல் கட்சிகளும் கடந்த ஓராண்டாக இப்பிரச்சினையில் தொடர் அழுத்தம் தரவில்லை. நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்யவில்லை.
இதேபோலத்தான், இப்போது பொங்கல் விடுமுறையையும் கடந்த ஆட்சி மீது பழி போட்டு தப்பிக்க ஆரம்பபித்துள்ளது பாஜக. இதுவரை தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை எழுப்பாமல் இருந்தது தவறுதான் என்றாலும், இப்போது பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதே. இப்போதாவது, விடுமுறை பட்டியலில் திருத்தம் கொண்டுவந்து பொங்கலை கட்டாய விடுமுறை பட்டியலில் பாஜக சேர்க்கலாமே. இதுதான் தமிழர்கள் கோரிக்கையாக உள்ளது.
அல்லது பாம்பு-கீரி சண்டை போல கடிக்க விடுவதை போல ஏமாற்றி கூட்டம் சேர்க்கும் வித்தையாகத்தான் பொங்கல் விடுமுறை, ஜல்லிக்கட்டு விஷயங்களில் அரசியல் கட்சிகள் நடந்து கொள்கின்றன என்பது உறுதியாகும்.