நாக்கை அறு, தலையை வெட்டு, ஆபாச வசை.. தமிழக அரசியல் களத்தின் மாண்புகளை படுகொலை செய்யும் பாஜக!
நாக்கை அறுப்பேன்; ஆபாச வசை பாடுவேன் என அரசியல் அநாகரிகங்களையும் வன்முறை பாதைகளையும் இறக்குமதி செய்ய முயற்சிக்கிறது பாஜக.
Recommended Video
சென்னை: தமிழக அரசியல் களம் எத்தனையோ அனல் பறக்கும் சர்ச்சைகளை நாகரிகத்துடன் சந்தித்திருக்கிறது.. ஆனால் இப்போது தலையை வெட்டு, நாக்கை அறு, ஆபாச வசை என உச்சகட்ட வன்முறை பாதைக்கு திசை திருப்பிக் கொண்டிருக்கிறது பாஜக.
தந்தை பெரியாரும் மூதறிஞர் ராஜாஜியும் அரசியல் களத்தில் பரம எதிரிகள்... ஆனால் பெரியாருக்கு ராஜாஜி அன்பார்ந்த நண்பராக திகழ்ந்தார். ராஜாஜி மறைவின் போது குலுங்கி குலுங்கி அழுதவர் தந்தை பெரியார்.
மகாத்மா காந்தியை அரசியல் களத்தில் உச்சகட்டமாக விமர்சனம் செய்தவர் தந்தை பெரியார். ஆனால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது தேசத்துக்கு காந்தியார் நாடு என பெயர் வைக்க சொன்னவர் தந்தை பெரியார்.
தமிழகத்தில் வன்முறை இல்லை
மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே எனும் பிராமணர் படுகொலை செய்தார். அதனால் நாடு முழுவதும் பிராமணர்கள் மீது தாக்குதல் நடந்தது. ஆனால் பெரியாரின் மண்ணில் பிராமணர்கள் மீது துரும்புகூட படவில்லை.
அக்ரஹாரங்களில் அமைதி
பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்த தந்தை பெரியார் மீது கற்களும் செருப்புகளும் வீசப்பட்டன. ஆனால் அக்ரஹாரங்கள் அமைதியாக வேதங்களை ஓதிக் கொண்டிருந்தன. மண்ணெண்ணெய் கேனையும் தீப்பெட்டியையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன பெரியார் ஒருபோதும் அவற்றை பயன்படுத்த கட்டளை பிறப்பிக்கவில்லை.
தீக்குளிப்பு சம்பவங்கள்
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் போர்க்களங்களை கண்டிருக்கிறது. இந்த போர்க்களங்களில் தங்களைத் தான் தீ கங்குகளுக்கு தின்ன கொடுத்தார்கள் தமிழர்கள்; தங்களது மார்புகளை துப்பாக்கிக் குண்டுகளுக்குக் காட்டினார்கள் தமிழர்கள்.
கருணாநிதி கர்ஜனை
அண்ணா எழுத்துகளால் அனல் கக்கினார்... அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் என கருணாநிதி கர்ஜித்தார். கல்கியில் சக்கரவர்த்தி திருமகன் என ராஜாஜி தொடர் எழுதினார்... முரசொலியில் கருணாநிதியோ சக்கரவர்த்தியின் திருமகன் என பதில் தொடர் எழுதினார்.
ராவணலீலா நடத்துவோம்
அதில்தான், வடபுலத்தில் ராவணனை எரித்து ராமலீலா நடத்தினால் தென்புலத்திலே ராமனை எரித்து ராவண லீலா நடத்துவோம் என பிரகடனப்படுத்தினார் கருணாநிதி. துக்ளக் கக்கிய எத்தனையோ விஷங்களுக்கு திராவிடர் இயக்கம் ஏடுகளில் பதில் சொன்னதே தவிர தடிகளால் அல்ல..
அகோரிகளின் பேச்சு
ஆனால் ஆண்டாளை பற்றி வைரமுத்து ஒரு ஆய்வு கருத்தை மேற்கோள் காட்டிவிட்டார் என்பதை முன்வைத்து இத்தனை வன்மத்தை வெளிப்படுத்துவது வித்தியாசமாக உள்ளது, பல கேள்விகளை எழுப்புகிறது. வன்முறை வாளேந்தி பேசுகிறார்கள் சிலர்.. மத்தியில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ10 லட்சம் தருவேன்; வைரமுத்துவை கொலை செய்யலாம் என அகோரிகளாக மாறி பேசி அதிர்ச்சியூட்டுகிறார்கள்.
தமிழர்கள்தான் கொந்தளிக்க வேண்டும்
தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர் ஆண்டாள் என்ற ஒற்றை கருத்தை முன்வைத்து புதிய பாதைக்கு வழிதேடுகிறதோ பாஜக என எண்ண வைக்கிறது. அப்படியானால் தமிழ்ப் பெண்களை பல நூற்றாண்டுகளாக தேவதாசிகளாகவே ஆக்கி வைத்திருந்ததற்கு; தேவதாசி முறையை ஒழிக்க விடாமல் பிரசங்கம் செய்ததற்கு தமிழர்கள்தானே கொந்தளித்துப் பேச வேண்டும்.. அதை வசதியாக மறந்துவிட்டதா பாஜக என கேட்க வைக்கிறது.
கனவு பலிக்காது
இது தமிழ்நாடு... அரசியல் களத்தில் மாண்புகளை போற்றுகிற பூமி. வட இந்தியாவைப் போல தமிழகத்தை வன்முறை களமாக்கி இங்கே ஓட்டு வேட்டையாடலாம் என பாஜக மட்டுமல்ல வேறு யாரும் கனவு கண்டாலும் அது நிச்சயம் நிறைவேறாது; எதிர்விளைவுகளைத்தான் எதிர்கொள்ள நேரிடும் என்பது நிதர்சனம்!