“உதயநிதி ரொம்ப ஆடக்கூடாது.. கொஞ்சம் அடக்கிப் பேசணும்..” எச்.ராஜா வார்னிங்!
தஞ்சாவூர்: உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதித்துள்ளது. அதை நினைத்துக் கொண்டு உதயநிதி ஸ்டாலின் ரொம்ப ஆடக்கூடாது, கொஞ்சம் அடக்கிப் பேச வேண்டும், இல்லையென்றால் அதற்கு தகுந்த விலை கொடுக்க வேண்டி இருக்கும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை ரெய்டு விவகாரத்தைத் தொடர்ந்து, அதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இது அமலாக்கத்துறைக்கு பெரிய அடியாக விழுந்தது.

தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதை அடுத்து மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதல்வருக்கு மூன்று ஆண்டுகளாக புத்தியில் படவில்லை, தற்போது புத்தியில் பட்டுள்ளது. அதனால் அவர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்." என்றார்.
மேலும் பேசிய எச்.ராஜா, "அந்த ஆகாஷ் பாகிஸ்தானை அலங்கோலப் படுத்தியது. தற்போது ஒரு ஆகாஷ் வந்துள்ளார், அறிவாலயத்தை அலங்கோலப்படுத்த. அதனால் ஒன்றும் கவலை இல்லை. உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதித்துள்ளது. அதை நினைத்துக் கொண்டு உதயநிதி ரொம்ப ஆடக்கூடாது. கொஞ்சம் அடக்கி பேச வேண்டும். தகுந்த விலை கொடுக்க வேண்டி இருக்கும். அனைவர் பேசுவதற்கும் ராஜா பதில் சொல்ல முடியாது. உதயநிதியோ உளறல் நிதியோ இருக்கட்டும் நடக்கட்டும்" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர் சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த வாரம் டாஸ்மாக் அலுவலகம், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, தொழிலதிபர் ரத்தீஷ், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தது. அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது என்றும் வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டிய உச்ச நீதிமன்றம், ஒட்டுமொத்த நிறுவனத்தையும் எப்படி விசாரிக்கலாம் என கேள்வி எழுப்பியது. இதனையடுத்து விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி உரிமை கேட்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்யத் தான் செய்வார். எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. நாங்கள் ED மட்டுமல்ல, மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம். நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்போம்.
மிரட்டப் பார்த்தார்கள். மிரட்டி அடிபணிந்து பயப்படுவதற்கு அடிமைக் கட்சி கிடையாது திமுக. கலைஞர் உருவாக்கிய திமுக இது. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கையுடைய கட்சி. தப்பு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் அடிபணிய தேவையில்லை. பயப்பட வேண்டிய அவசியமும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டபூர்வமாகச் சந்திப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications