நீயாவது பூணூலை தான் அறுப்ப.. நாங்க.. சுப.வீயை மிரட்டி ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகி.. நயினார் கப்சிப்!
நெல்லை : சுப.வீரபாண்டியனின் நாக்கை இழுத்துப் பிடித்து அறுத்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து, மிக ஆபாசமாக பாஜக நிர்வாகி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்ரி சேஷாத்ரி தொடர்பான சர்ச்சையின்போது சுப.வீரபாண்டியன் பேசியதை விமர்சித்துப் பேசிய நெல்லை பாஜக நிர்வாகி மகாராஜன், ஆபாசமாகப் பேசி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
முன்னணி தலைவரை மிகவும் ஆபாசமாகப் பேசி பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகியின் செயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக நிர்வாகி பேசிய வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மாநில உரிமைகளை பறிப்பதா? பாஜக அரசை கண்டித்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறைக்கூவல்!
பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி தமிழக பாஜக சார்பில் நேற்று தமிழகத்தில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். பாஜக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் பாஜக நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
பூணூலை அறுப்பியா
மகாராஜன் பேசுகையில், "அண்ணாவை இடியட் என்று கூறியவரை சுப.வீரபாண்டியன் கடுமையாக மிரட்டுகிறார். அது அவரது கருத்து, அதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தையே இழிவுபடுத்தும் வகையில் பூணூல் அறுப்பதாக சொன்னால், நீயாவது பூணூல் மட்டும் தான் அறுப்ப.. நான் உன் நாக்கை இழுத்துப் பிடித்து அறுப்பேன்.
ஆபாச பேச்சு
கீழேயும் இழுத்து பிடித்து அறுப்போம் நாங்க அப்படி ஆளு உனக்கு தெரியாது. திருநெல்வேலிக்கு நீ வந்து பாரு.. ரெண்டு பக்கமும் அறுக்கிறோமா இல்லையானு பாரு.." என்று ஆபாசமாக ஒருமையில் பேசினார். மகாராஜன் பேசும்போது, அவருக்கு அருகிலேயே நின்றிருந்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தபடி அமைதியாக இருந்தார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
சுப.வீரபாண்டியன் குறித்து ஆபாசமான வகையில் மிரட்டல் விடுக்குமாறு பாஜக தலைவர் மகாராஜன் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொது மேடையில் கீழ்த்தரமாகப் பேசிய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பத்ரி சர்ச்சை
கிழக்கு பதிப்பக உரிமையாளரும், வலதுசாரி ஆதரவாளருமான பத்ரி சேஷாத்ரி, முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை முட்டாள் என விமர்சித்து ட்வீட் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் இருந்து பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டார்.
சுப.வீ பேசியது
அதைத்தொடர்ந்து திமுக மேடை ஒன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பத்ரி சேஷாத்ரியின் கருத்தைக் கண்டித்திருந்தார். அண்ணா, கருணாநிதி பற்றி எவன் ஒருவன் தவறாக பேசினாலும் மரியாதை கொடுக்க முடியாது, திமிராகப் பேசும் பார்ப்பனர்களின் பூணூலை அறுப்போம் என்கிற ரீதியில் பேசியிருந்தார் சுப.வீரபாண்டியன். அதைக் குறிப்பிட்டே பாஜக நிர்வாகி மகாராஜன் தற்போது மிகவும் ஆபாசமாகப் பேசியுள்ளார்.