"முதல்வர்" ஜெயலலிதாவுக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து!
சென்னை: இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

குளச்சல் துறைமுகம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் விரைவுபடுத்த ஜெயலலிதாவின் வருகை பெருமளவில் உதவும் என நம்புகிறேன். அவரது ஆட்சிகாலத்தில் தமிழகம் சிறப்புற வாழ்த்துகள்.
தமிழிசை சௌந்தரராஜன்: தமிழக முதல்வராக மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுவது வரவேற்கத்தக்கது. ஊழல் இல்லாத, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழகம் இருப்பதையே தமிழக்தில் உள்ள ஒவ்வொரும் விரும்புகின்றனர்.
எனவே, புதிதாக பதவி ஏற்கும் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல், நிர்வாகத் திறமை உடையவர்களாக இருக்க வேண்டும். வழக்கின் மூலமாகவும், தொண்டர்களின் பிரார்த்தனையின் மூலமாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விடுதலை கிடைத்திருப்பது மிகப் பெரிய நிம்மதி.
அதேபோன்ற நிம்மதி தமிழக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆகவே, டாஸ்மாக் இல்லாத தமிழகம் என்பதே முதல்வராகப் பொறுப்பேற்றதும் முதல் அறிவிப்பாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications