விடுதலை சிறுத்தைகள் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இழுக்க படாதபாடுபடும் பாஜக!
சென்னை: 'இந்துத்துவா' எதிர்ப்பில் உறுதியாக இருப்பதாக பிரகடனம் செய்து கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இழுத்து வந்துவிட வேண்டும் என்பதில் பாஜக மும்முரமாக இருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தில் பாஜகவால் வேர்பிடிக்க முடியவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைத்தும் கூட முயற்சித்தது. ஆனால் பாஜகவை தமிழக மக்கள் ஏற்கவில்லை.
சட்டசபை தேர்தலின் போது பாஜக இருக்கும் பக்கம் திசைதிரும்பி பார்க்க கூட எந்த கட்சிகளுமே முன்வரவில்லை. சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதச்சார்பற்ற கூட்டணி என்ற முழக்கத்தை முன்வைத்து திமுக பக்கம் சாயத் தொடங்கியது.

ஸ்டாலின் தரப்பு...
திமுகவைப் பொறுத்தவரையில் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் இருந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் தரப்பு உறுதியாக இருக்கிறது. ஆனால் கருணாநிதியோ விடுதலைச் சிறுத்தைகளும் இருக்கட்டும் என கருதுகிறார். இதற்காக திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சற்று நெருக்கமாகிப் பார்த்தார். ஆனால் ஸ்டாலின் தரப்பு அசைந்து கொடுக்கவில்லை.

மோடியை புகழ்ந்த ரவிக்குமார்
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். இது அக்கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்தை கிளப்பியது. பின்னர் அது ஒருவழியாக அடங்கியது. ஆனாலும் ரவிக்குமார், மத்திய பாஜக அரசு மீது மென்மையான விமர்சனங்களைத்தான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

திருமாவின் டெல்லி பயணம்
பின்னர் திடீரென டெல்லி சென்ற திருமாவளவன் மத்திய அமைச்சர்கள் பஸ்வான், அத்வாலே ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் பாஜகவின் ராஜ்யசபா எம்பி இல. கணேசனை விமான நிலையத்தில் சந்தித்து பேசியதுடன் ஒரே விமானத்தில் இருவரும் சென்னை வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக கூட்டணியா?
இதனால் பாஜக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இணையலாம் என கூறப்பட்டது. இதை திருமாவளவன் நிராகரித்திருந்தார்.

தன்வயப்படுத்தும் இந்துத்துவா
கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், இந்துத்துவா எப்போதுமே தம்மை எதிர்ப்பவர்களை தன்வயப்படுத்தியே வருகிறது. இந்துத்துவாவை எதிர்த்த பஸ்வான், அத்வாலே ஆகியோர் இன்று மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். மாயாவதி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் ; ஆனாலும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து இந்துத்துவாவை எதிர்க்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

பொன். ராதா சந்திப்பு
தற்போது மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திடீரென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று திருமாவளவனை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இச்சந்திப்பு நட்பு ரீதியானது என்றே இருவரும் கூறிக் கொள்வதை யாரும் சட்டென நம்புவதாகவும் இல்லை. திருமாவளவனின் வார்த்தைகளிலேயே சொல்வதானால், இந்துத்துவா பேசும் பாஜக தற்போது விடுதலைச் சிறுத்தைகளை மெல்ல மெல்ல தன்வயப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications