பாஜக நேர்காணல் தொடங்கியது... 13 இடங்களில் இன்றும், நாளையும் நடக்கிறது!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இன்றும் நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி, தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஏற்கனவே, திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள், தங்களது கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணலை நடத்தி முடித்து விட்டன.
இந்நிலையில், பாஜக சார்பில் நேர்காணல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. சென்னை மண்டலத்தில் மனு செய்தவர்களிடம் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்துகின்றனர். திருச்சியில் நடைபெறும் நேர்காணலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் நடத்துகிறார். தமிழகத்தில் 13 மண்டலங்களில் இந்த நேர்காணல் நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த வாரம் நடந்த விருப்பமனுத் தாக்கலின் போது, பாஜக சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிட சுமார் 3,000 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
தேமுதிகவை எப்படியும் தங்களது கூட்டணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என பாஜக முயற்சித்தது தோல்வியில் முடிந்தது. தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்து விட்டார்.
இதனால், பாஜக தனித்து போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இன்று பாஜக நேர்காணல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications