எங்க ஹீரோ எப்பவுமே மோடிதான்... ஆர்.கே. நகரில் நாங்க ஜெயிப்போம்- தமிழிசை
பாஜகவின் ஹீரோ எப்போதுமோ மோடிதான் என்றும் ஆர்.கே. நகரில் நாங்கள்தான் ஜெயிப்போம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கங்கை அமரன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எங்களுடைய ஹீரோ மோடிதான் என்றார். ஆர்.கே. நகர் தொகுதியில் தாமரை மலரும் என்றும் தெரிவித்தார்.
ஏப்ரல் 12ஆம் தேதி ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்தனர்.
ஆர். கே நகரில் போட்டியிடும் கங்கை அமரன் தண்டையார்பேட்டையில் உள்ள பா.ஜ.க தலைமை தேர்தல் பணிமனையில் இருந்து ஊர்வலமாக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இரட்டை இலை முடக்கம்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், இரட்டை இலை முடக்கப்படும் என்று முன்பே தெரியும் என்று கூறினார். இதற்குக் காரணம் அதிமுகவினர்தான் காரணம் என்றும் தெரிவித்தார். 1989இல் இதேபோன்ற ஒரு அரசியல் சூழல் உருவானது. அப்போதும் இரட்டை இலை முடக்கப்பட்டது. இளம் வயதிலிருந்தே அரசியல் சூழ்நிலைகளை கவனித்துவருவதால் இப்போதும் அதற்கான வாய்ப்பு உண்டு என்ற எனது கருத்தை தெரிவித்திருந்தேன் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
முடக்கப்பட்டது சரியே
அதிமுக கட்சியின் சின்னத்தை முடக்கி அரசியல் ஆதாயம் தேடவேண்டிய நிலையில் பாஜக இல்லை என்றும் கூறினார். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டதுதான் அதிமுக. அவர்கள் இருவரது நோக்கமும் காப்பாற்றப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, முடக்கிவைக்கப்படுவதுதான் சரியானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஹீரோ மோடி
ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தரவில்லை என்று கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த தமிழிசை, எங்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார் என்றார். எங்களின் ஹீரோ எப்பவுமோ மோடிதான், தலைவர் அமித்ஷா தான் அவர்களின் வழியில் சென்று வெற்றி பெறுவோம் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தாமரை மலரும்
கங்கையின் மூலமாக ஆர்.கே. நகரில் தாமரை மலரும் இதன் மூலம் இந்த தொகுதி பிரதமர் மோடியின் நேரடி பார்வைக்கு செல்லும். இதன் மூலம் இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம் என்றும் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.