2016 சட்டசபை தேர்தலுக்கு ரெடியாகுங்க: கூட்டணி தலைவர்களுக்கு பூஸ்ட் கொடுத்த பாஜக
சென்னை: அடுத்து வரும் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தற்போதில் இருந்தே தயாராகுமாறு தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைமை அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளதாம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேமுதிக, மதிமுக, பாமக, இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
கூட்டணி கட்சிகளில் பாமக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புணி மட்டுமே வெற்றி பெற்றார். மற்றவர்கள் தோல்வியை தழுவினர்.
இந்நிலையில் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி ஆனால் கொஞ்சம் வலுவான கூட்டணி அமைய வேண்டும் என பாஜக எதிர்பார்க்கின்றது. எனவே, தற்போது பாஜக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரிடம், உங்களை நாடாளுமன்றத்திற்கு தான் எங்களால் அனுப்ப முடியவில்லை. எனவே, அடுத்த சட்டசபை தேர்லுக்கு எந்த தொகுதி வேண்டுமோ அந்த தொகுதியில் இப்போது முதலே தயாராகுங்கள் என பாஜக டெல்லி தலைமை சிக்னல் கொடுத்துள்ளதாம்.
அதே போன்று தமிழக பாஜக மூத்த தலைவர்களான இல.கணேசன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கும் பூஸ்ட் கொடுத்துள்ளார்களாம்.