ஜனாதிபதி தேர்தலில் 'கழகங்கள்' வாக்குகள் தேவையில்லை .. பகிரங்கமாக சொல்லுமா பாஜக?
ஜனாதிபதி தேர்தலில் திராவிட கட்சிகளின் வாக்குகளே தேவையில்லை என்பதை பகிரங்கமாக சொல்லுமா பாஜக என்பது அரசியல் பார்வையாளர்களின் கேள்வி.
சென்னை: கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி. அப்படியானால் வரப் போகும் ஜனாதிபதி தேர்தலில் கழகங்களின் வாக்குகளே வேண்டாம் என பகிரங்கமாக அறிவிக்கும் திராணி பாஜகவுக்கு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் காலூன்றுவதற்கு தலைகீழாக நின்று போராடி பார்க்கிறது பாஜக. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளை எப்படியெல்லாம் காலி செய்ய முடியுமோ அத்தனை குறுக்கு வழிகளிலும் புகுந்து விளையாடுகிறது பாஜக.

கழகங்கள் இல்லாத தமிழகம்
இதற்காகவே கழகங்கள் இல்லாத தமிழகம் என்கிற கோஷத்தை முன்வைத்து வருகிறது பாஜக. தமிழகத்தின் பல இடங்களில் சுவர் எழுத்துகள் கூட எழுதி வைத்துள்ளது பாஜக.

கழங்களிடம் கெஞ்சல்
இப்படி ஒரு பக்கம் கூவிக் கொண்டே, ஜனாதிபதி தேர்தலில் அதிமுக- திமுகவின் வாக்குகளுக்காக கெஞ்சிக் கொண்டும் இருக்கிறது பாஜக. இடியாப்ப சிக்கலில் இருக்கும் இந்த கட்சிகளும் பாஜகவை பகிரங்கமாக ஆதரிக்க ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றன.

சொல்லும் தைரியம் இருக்கிறதா?
கழகங்களே இல்லாத தமிழகம் தேவை என கூறும் பாஜக தலைவர்களால், கழகங்களின் வாக்குகளே எங்களுக்கு வேண்டாம்; ஜனாதிபதி தேர்தலில் கழகங்கள் ஆதரவு இல்லாமல் வெல்வோம் என்று சொல்லுகிற திராணி பாஜகவுக்கு இருந்தால் அந்த துணிச்சலைப் பாராட்டலாம். அதிமுக- திமுகவின் வாக்குகள் இல்லாமல் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் வெல்ல முடியாது.

அஜெண்டா
இதுதான் நிதர்சனம்...அதேபோல் அதிமுகவின் கோஷ்டிகளுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி அமைக்காமல் உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலையும் பாஜக சந்திக்க முடியாது. கழகங்களின் முதுகில் ஏறிக் கொண்டு கழகங்களின் காலில் விழுந்தபடியே காலை வாரிடும் கச்சிதமான அஜெண்டாதான் பாஜகவினுடையது என்பதை தமிழகம் நன்கு அறியும்.












Click it and Unblock the Notifications