பாஜக மாவட்ட தலைவருக்கு சொந்தக் கட்சியினரே கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு! தென்காசியில் பரபரப்பு
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமிக்கு சொந்தக் கட்சியினரே கருப்பு கொடி காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணம் வாங்கிக்கொண்டு பொறுப்பாளர்களை நியமிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட தலைவர் ஆனந்தனுக்கு எதிராக பாஜகவினரே கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனந்தன் அய்யாசாமி, தென்காசி மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே மாவட்டம் முழுவதிலும் பாஜகவினர் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சங்கரன்கோவில் நகரத் தலைவராக புதிய நபர் ஒருவரை அறிவித்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளது.
தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமியின் செயல்பாடுகள் மீது கட்சியினருக்கே திருப்தி இல்லை என்றும், பணம் பெற்றுக் கொண்டு பொறுப்பாளர்களை நியமிப்பதாகவும் தென்காசி பாஜகவினர் பொறுமி வருகின்றனர். சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள் பொறுப்பாளர்கள் ஆக நியமிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும் உட்கட்சி பிரச்சனைகள் இருப்பதாகவும், அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்காததால் தென்காசி மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து ஆனந்தன் அய்யாசாமி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவர் வருகையின் போது பாஜகவினரே கருப்புக் கொடி காட்டி உள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி வரும்போது அக்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியைச் சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி, விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றியவர். இவர் பாஜகவின் வெளி மாநிலம் மற்றும் அண்டை நாடுகள் பிரிவின் துணைத் தலைவராகவும், 'என் மண் என் மக்கள்' நிகழ்ச்சியின் தென்காசி மக்களவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார்.
ஆனந்தன் அய்யாசமி பாஜக மாநில ஸ்டார்ட் அப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தென்காசி மாவட்ட பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தென்காசி மாவட்ட பாஜகவினர் மத்தியிலேயே ஆனந்தன் அய்யாசாமி மீது அதிருப்தி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications