தேமுதிக முடிவை வரவேற்கிறோம்.. திருமா; எங்களுக்கு இது தோல்வி அல்ல - தமிழிசை
சென்னை: தனித்துப் போட்டியிடும் தேமுதிகவின் முடிவை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அதேசமயம், விஜயகாந்த்தின் முடிவு, தங்களுக்குக் கிடைத்த தோல்வி அல்ல என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தேமுதிக முடிவு இன்று வெளியானதைத் தொடர்ந்து தலைவர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த திருமாவளவன் கூறுகையில் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். வாக்குகள் சிதறக் கூடாது என்பதால்தான் மக்கள் நலக் கூட்டணிக்கு வருமாறு அழைத்தோம்.
தேமுதிக தனித்துப் போட்டியிடுமானால் அது ஜனநாயகத்தை பலப்படுத்துவதாக அமையும். மக்கள் தாங்கள் விரும்பும் கட்சியை, ஆட்சியமைக்க தேர்வு செய்வார்கள் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
தோல்வி அல்ல - தமிழிசை
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், இது பாஜகவின் முயற்சிகளுக்குக் கிடைத்த தோல்வி அல்ல. அனைவரையும் ஒன்றிணைக்கவே முயற்சித்தோம். தற்போது 234 தொகுதிகளிலும் பாஜ்கவின் பலத்தை நிரூபிப்போம். தற்போது அவரவர் பலத்தைக் காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் தமிழிசை.