பட்டிமன்றம் போட்டு ஊழலை பறை சாற்றுகிறார்கள்… நெல்லையில் பட்டையை கிளப்பிய விஜயகாந்த்…
திருநெல்வேலி: அ.தி.மு.க., தி.மு.க.,வில் பங்காளிச்சண்டை நடக்கிறது. யார் அதிக அளவு ஊழல் செய்துள்ளார்கள் என்பதில் பட்டிமன்றம் போட்டு பேசுகிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது 2ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை விஜயகாந்த் நேற்று நெல்லையில் தொடங்கினார்.
தே.மு.தி.க., வேட்பாளர் சிவனணைந்த பெருமாளை ஆதரித்து, பிரசாரம் செய்த அவர், பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பேசியதாவது:
வாய்க்கா வரப்பு சண்டையில்லை
இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடி வரவேண்டும் என்பதற்காக நான் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். எங்கள் கூட்டணிக்குள் வாய்க்கால் வரப்பு சண்டை, பெண் கொடுத்து எடுப்பதில் சண்டையோ வராது.
பங்காளிச்சண்டை
ஆனால் அ.தி.மு.க., தி.மு.க.,வில் பங்காளிச்சண்டை நடக்கிறது. யார் அதிக அளவு ஊழல் செய்துள்ளார்கள் என்பதில் பட்டிமன்றம் போட்டு பேசுகிறார்கள்.
வளமான குஜராத்
குஜராத்தில் 75 சதவீதம் கட்டாந்தரையாக இருந்த நிலத்தை முழுவதும் வளமான நிலமாக மாற்றியுள்ளார் குஜராத்தின் வெண்தாடி வேந்தர் நரேந்திரமோடி. நதிகள் இணைப்பு மேற்கொண்டார்.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது
புதுச்சேரியில் போய், சட்டம் ஒழுங்கு பாதிப்பு என ஜெயலலிதா சொல்கிறார். தமிழகத்தில் மட்டும் என்ன நிலை. இங்கும் சந்தி சிரிக்கிறது. குஜராத்தில் மோடி, மேற்கொண்ட பணிகளை,இந்தியா முழுவதும் மேற்கொள்ள அவரை பிரதமராக்கவேண்டும் என்றார் விஜயகாந்த்.
கேட்குதா… கேட்குதா…
பிரசாரத்தில் விஜயகாந்த் சீரியசாக பேசிக்கொண்டிருந்த போதே மைக் மக்கர் செய்தது. ஆனாலும் அதை லாவகமாக சமாளித்தார் விஜயகாந்த். இப்ப கேட்குதா... இப்ப கேட்குதா என்று மக்களிடம் கேட்டு அட்ஜஸ்ட் செய்து பேசினார். ஒருபக்கம் திருப்பினால் மைக் சத்தம் போடவே அதை சமாளித்தார் விஜயாகாந்த்.
கண் கூசுதுப்பா….
எதிர்கட்சிகளின் ஊழல்களை பட்டியலிட்டுக்கொண்டு வந்த விஜயகாந்த் திரும்பி பேசும் போது வேனில் இருந்த லைட் வெளிச்சம் கண்ணை கூசச் செய்து விட்டது. அதில் பேசவந்ததை மறந்துவிட்டார் விஜயகாந்த். தொடர்ந்து பேசி சமாளித்தார்.
ரைமிங்காக அடித்த விஜயகாந்த்
தேர்தல் சின்னங்களைப் பற்றி பேசிய விஜயகாந்த்... முரசு கொட்ட கொட்ட.... தாமரை மலர... மலர.... மாங்கனி கனிய... கனிய... பம்பரம் சுழல... சுழல... தேசிய முற்போக்கு திராவிடக்கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கேட்கவே... கூடியிருந்த கூட்டம் ஆர்பரித்தது