2016ல் அதிமுக, திமுக துணையின்றி பாஜக ஆட்சி அமைக்கும்: சென்னை ஏர்போர்ட்டில் இருந்து பொன்னார்
சென்னை: 2016ம் ஆண்டில் தமிழகத்தில் அதிமுக, திமுக துணையின்றி பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று காலை விமானம் மூலம் கிளம்பி சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் இல்லாமல் வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்தை பாஜக அளிக்கும்.
2016ம் ஆண்டில் தமிழகத்தில் அதிமுக, திமுக துணையின்றி பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதே நம் நாட்டை முன்னேற்றத் தான் என்றார்.
முன்னதாக அவர் பெங்களூரில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசுகையில், தென் மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு அடுத்த ஆண்டு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் சட்டசபை தேர்தல் பற்றி முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.