எங்களால் மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும் – சொல்வது தமிழிசை
கும்பகோணம்: பாஜகவினால் மட்டுமே தமிழகத்தினை காப்பாற்ற முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பா.ஜ.கவின் 2 நாள் மாநில செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

அக்கூட்டத்தில் அவர், "தமிழகத்தில் பா.ஜ.க மாபெரும் சக்தியாக உருவாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஏற்படாத ஒரு மாற்றம், ஒரு மலர்ச்சி இனி ஏற்பட போகிறது.
2 எம்.பி.க்களோடு இருந்த பா.ஜ.க இன்று அறுதி பெரும்பான்மையோடு அகில இந்திய அளவில் பெரிய கட்சியாக திகழ்கிறது. இதேபோல தமிழகத்திலும் அந்த நிலை ஏற்படும். அதற்கு அடித்தளம் அமைக்கும் கூட்டமாக தான் இந்த கூட்டம் திகழ்கிறது.
இன்று அகில இந்திய அளவில், ஏன் உலகிலேயே 10.5 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சி பா.ஜ.கதான். இந்த கட்சியில் நாம் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்பதே பெருமை தான்.
இதுவரை தமிழகத்தில் ஆண்ட கட்சியும், தேசிய கட்சியும் கூட உறுப்பினர்களை விரைவாக சேர்த்ததில்லை. பா.ஜ.க.வினர் ஒவ்வொருவரும் பாடுபட்டதன் விளைவாக தமிழகத்தில் 3 மாதங்களிலேயே 40 லட்சம் உறுப்பினர்களை நாம் சேர்த்துள்ளோம்.
வரும் காலத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. மாற்று சக்தியாக உருவாகும். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
ஆனால பா.ஜ.க கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றது. 2016 இல் நாம் ஆளும் கட்சியாக இருக்க போகிறோம். தமிழகத்தை பா.ஜ.க.வால் மட்டுமே காப்பாற்ற முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications