ஸ்ரீரங்கத்தில் பாஜக வெற்றி பெறும் என்பது உண்மைக்கு புறம்பானது: பாரிவேந்தர்
நாமக்கல்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பது உண்மைக்கு புறம்பானது என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ராசிபுரம் அருகே உள்ள புதுபப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நதிகள் இணைப்பு, மது ஒழிப்பபு, ஊழலற்ற தமிழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் இந்திய ஜனநாயக கட்சியின் 5வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொள்கை, கருத்து ஒற்றுமை ஆகியவையால் வரும் 2016ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடனான தோழமை தொடரும். ஏன் அதன் பிறகும் தொடரும். பாஜகவுடன் முதலில் தோழமை கொண்ட கட்சி எங்களுடையது. மோடி காலத்தில் பாஜகவுடன் தோழமை கொண்டாடியுள்ளது பெருமையான விஷயம். மோடி ஆட்சியில் இந்தியா விரைவில் வல்லரசாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
குஜராத்தை முன்னேற்றிக் காட்டியவர் மோடி. தற்போது அனைத்து மாநிலங்களும் அவருடைய மாநிலங்கள் ஆகும். இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் நிலைமை நிச்சயம் மாறும்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்படி என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். திராவிட கட்சிகள் தங்களுக்கு பழக்கமான முறைகளை மறந்துவிடமாட்டார்கள். ஏற்கனவே பணப்பட்டுவாடா நடந்து வருவதாக மக்கள் கூறி வருகிறார்கள். இதை தேர்தல் ஆணையம் தான் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் அது தற்போது முடியாது.
நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றும், மோடியை நாட்டின் வளர்ச்சிக்கு அறிகுறியாக நினைப்பவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த வகையில் ஸ்ரீரங்கத்தில் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரிக்கும். இருப்பினும் பாஜக வெற்றி பெறும் என்பது உண்மைக்கு புறம்பானது என்றார்.












Click it and Unblock the Notifications