ஆம் ஆத்மி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல்... ஆம்பூரில் பதற்றம்: 10 பேர் கைது
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஆம் ஆத்மியினர் மீது தாக்குதல் நடத்திய, பாரதிய ஜனதாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்ற, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றத்தைத் தணிக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த தீர்மானித்திருந்தனர். அதன் அடிப்படையில் ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டி கிராமத்தில் உள்ள வேலூர் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சியினர் போலீஸாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த 5க்கும் மேற்பட்டோர் வடபுதுப்பட்டு கிராமத்துக்கு காரில் சென்றனர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்துக்கு முன்பு திரண்டனர். ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு சென்ற உடன் அவர்களுடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியினரும் தாக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து காயங்களுடன் அவர்கள் அங்கிருந்து ஓடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூரிலிருந்து சிறப்பு அதிரடிப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்ட எஸ்பி செந்தில்குமாரி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். காரில் வந்த ஆம் ஆத்மி கட்சியினரில் சிலர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். அதனால் இந்து - முஸ்லிம் பிரச்னை ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில் வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன் வடபுதுப்பட்டு கிராமத்துக்குச் சென்று சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் ஆம்பூருக்கு விரைந்த வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாத் அங்கு விசாரணை நடத்தினார். ஆம் ஆத்மியினர் மீது தாக்குதல் நடத்திய, பாரதிய ஜனதாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்ற, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மண்டல ஐ.ஜி மஞ்சுநாதா தெரிவித்துள்ளனர். மேலும் ஆம்பூர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications