மதுரை: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உடல் சிதறி பலி
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள வடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னன். கடந்த 15 ஆண்டுகளாக இவர் சிக்கம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இதில் சுமார் 50 பேர் பணிபுரிகின்றனர்.
செவ்வாய்க்கிழமை மாலையில் பணி நேரம் முடிந்து பலர் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றுள்ளனர். சிலர் இரவுப் பணிக்காக வந்துள்ளனர். அப்போது திடீரென பட்டாசு கருமருந்து வெடித்தது. இதையடுத்து, அங்கிருந்த மரம் மற்றும் ஆலையின் அறைகளில் தீப்பற்றியது. தீயால் ஏற்பட்ட கரும்புகை பல கிலோமீட்டர் தொலைவுக்குத் தெரிந்தது.
சம்பவம் அறிந்ததும் உசிலம்பட்டி, செக்கானூரணி மற்றும் மதுரையிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.பல மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதில், 30 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட சின்னப்பொண்ணு (35), பஞ்சு (25) ஆகிய இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.மேலும் விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் பொட்டல்பட்டியைச் சேர்ந்த முத்து மனைவி விஜயா (40) மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதுபோல, செக்கானூரணி தனியார் மருத்துவமனையிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியில் மாவிலைப்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி மகன் பிரபு (25) உயிரிழந்தார்.
இந்த விபத்தில், கூத்தம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (35), கருமாத்தூரைச் சேர்ந்த பெரியகருப்பன் மனைவி பூங்கொடி (37), சிக்கம்பட்டியைச் சேர்ந்த குமார் (32) உள்ளிட்ட 24 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆலை உரிமையாளர் கைது
விபத்து நடந்த பட்டாசு ஆலையை மதுரை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்யுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.