சென்னை லயோலா கல்லூரிக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வருகிறது லயோலா கல்லூரி. இந்தக் கல்லூரிக்கு நேற்று கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது. மேலும் அந்தக் கடிதத்தில் அனுப்புநர் முகவரி, மஞ்சு,திருச்செங்கோடு,நாமக்கல் என எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தைப் படித்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி ஊழியர்கள், இது தொடர்பாக உடனடியாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்திலும் சந்தேகத்திற்குரிய வகையில் மற்றும் வெடிகுண்டு பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என அவர்கள் சோதனை நடத்தினர். அதில் எந்தவித வெடிபொருட்களும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. ஆனபோதும், அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.