கரூர் அருகே கோரம்: பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சாக்கடையில் சடலமாக மீட்பு
பிறந்து சில மணி நேரமே ஆன இறந்த குழந்தையை போலீசார் மீட்டனர்.
கரூர்:கரூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்றினை சாக்கடையில் சடலமாக வீசப்பட்ட சம்பவம் மனதை அடியோடு புரட்டி போட்டுள்ளது.
கரூர் அருகே உள்ளது ராயனூர் பகுதி. இங்குள்ள அன்புநகர் என்னும் இடத்தில் துணியில் சுற்றப்பட்டபெண் குழந்தை ஒன்று சடலமாக சாக்கடைக்குள் வீசப்பட்டு இருப்பதை கண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பிறந்து சில மணி நேரமே ஆன அக்குழந்தை குறித்து உடனடியாக பசுபதிபாளையம் போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை சாக்கடைக்குள்ளிருந்து மீட்டனர். இந்த குழந்தை யாருக்கு பிறந்தது என்பது தெரியவில்லை.
ஆசையுடன் கொஞ்ச வேண்டிய பச்சிளம் குழந்தையை இப்படி சாக்கடையில் போட மனம் துணிந்த பாவிகள் யார் என்று தெரியவில்லை. எந்த தாயும் பிரசவித்த 4 மணி நேரத்திற்குள் குழந்தையை இப்படி வீசியிருக்க வாய்ப்பு இல்லை. பெண் குழந்தை என்பதால் குடும்ப உறுப்பினர்கள் இதுபோன்ற அரக்க செயலில் ஈடுபட்டிருப்பார்களா என தெரியவில்லை. எனினும் போலீசார் இதுகுறித்து விசாரணையை தீவிரமாக கையிலெடுத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications