ஒரே புள்ளியில் இணையும் சங்கர், சுவாதி கொலை வழக்குகள்.. சமூகத்திற்கு உணர்த்தும் பாடம் என்ன?
சென்னை: வீட்டை எதிர்த்து காதலித்து மணந்த சங்கர் என்ற தலித் இளைஞரை பெண் வீட்டார் கூலிப்படையை ஏவி நடு ரோட்டில் கொலை செய்தனர். ஆனால் காதலிக்க மறுத்ததற்காக சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் சுவாதி, வாலிபரால் ரயில் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தலித் இளைஞரான சங்கர், அவரைவிட உயர் ஜாதியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார். பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்ச் மாதம் 13ம் தேதி உடுமலைப்பேட்டை பஜாரில் வைத்து கூலிப்படையினர் தம்பதிகளை சரமாரியாக வெட்டினர்.
இதில் கவுசல்யா உயிர் பிழைத்த நிலையில், சங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் தொடர்புள்ள கவுசல்யா குடும்பத்தார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்., விசாரணையை தினந்தோறும் என்ற ரீதியில் நடத்த வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாட்டை உலுக்கியது
சங்கர் கொலையை போலவே தமிழகத்தை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கிய மற்றொரு கொலை சம்பவம், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து நடந்தது. ஆம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில், சுவாதியை வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

காதல் மையப்புள்ளி
இரு கொலைகளுமே மக்கள் கண் எதிரில் நடந்தது என்பதோடு, காதல் என்ற விவகாரம் இரு கொலைகளுக்கும் மையப்புள்ளியாக இருந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

கைது
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன், ராம்குமார், சுவாதியை கொலை செய்ததாக இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பக்கத்து ஏரியா
சென்னையில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றிய ராம்குமார், தனது படிப்புக்கேற்ற வேலையை தேடி வந்துள்ளார். இவர் வசித்த சவுராஷ்டிரா நகர் பகுதி, சுவாதி வசித்த கங்கை அம்மன் கோயில் தெருவின் எதிர்த்தால்தான் உள்ளது.

தொல்லைகள்
சுவாதி வேலைக்கு செல்லும்போதெல்லாம் அவரை பார்த்து அவரது அழகில் மயங்கிய ராம்குமார், சுவாதியை காதலிக்க திட்டமிட்டு பின்தொடர்ந்துள்ளார். சுவாதியை பின்தொடர்ந்தாலும் தட்டி கேட்டு சண்டை போடும் அளவுக்கு அவரது குடும்ப பலம் இல்லை என்பதை உணர்ந்து சுவாதி முறைத்து பார்த்தாலும் அவரை விடாமல் தொல்லை கொடுத்துள்ளார்.

ஏற்க மறுத்தால் கொலை
வேலைக்கு செல்லும்போது, கோயிலுக்கு செல்லும்போதெல்லாம் சுவாதியை பின்தொடர்ந்து ராம்குமார் தொல்லை கொடுத்து வந்துள்ளார். காதலை சுவாதி ஏற்காத நிலையில், வாழை மரத்தை வெட்ட பயன்படக்கூடிய அரிவாளை எடுத்து சுவாதியை கொலை செய்துள்ளார்.

காதலித்தாலும், இல்லாவிட்டாலும்
சங்கர் கொலை வழக்கில் அவர் காதலித்தது தவறு என ஒரு குடும்பம் 'தீர்ப்பளித்து' கொலையை 'தண்டனையாக' வழங்கியது. சுவாதி விஷயத்தில் அவர் காதலிக்கவில்லை என்பதற்காக மரணத்தை 'தண்டனையாக' கொடுத்துள்ளார் ராம்குமார்.

அகங்காரம்
இவ்விரு கொலை சம்பவங்களிலுமே, சம்மந்தப்பட்ட நபர்களின் விருப்பத்தை மீறி தங்கள் விருப்பத்தை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்தரப்பின் பிடிவாதமே கொலைகளுக்கு காரணமாகியுள்ளது. தனிப்பட்ட நபர்களுக்கு மனது இருக்கும், அவர்களுக்கு மதிப்பு தர வேண்டும் என்று உணராத ஒரு ஆதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதை நெற்றி பொட்டில் அடித்து சொல்கிறது இவ்விரு கொலைகளும்.

பெண் அடிமைத்தனம்
காதலித்து மணந்தால் பெற்றோர் கூலிப்படையை ஏவி கொலை செய்கிறார்கள், காதலிக்க மறுத்தாலோ, புறக்கணிக்கப்பட்டவனே நேரடியாக வெட்டி கொலை செய்கிறான். பெண்களை தங்கள் கை பொம்மையாக பார்க்கும் நூற்றாண்டு கால மனநிலையில் இருந்து மனிதன் இன்னும் மாறவில்லை என்ற கோணத்திலும் இவ்விரு கொலைகளையும் பார்க்க முடியும்.












Click it and Unblock the Notifications