மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் தானம்: அந்த 9 நிமிடங்கள் சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூளை செயலிழந்த ஒரு நோயாளியின் இதயம் அடையாறிலுள்ள போர்ட்டிஸ் மலர் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக சென்னை போக்குவரத்து போலீசார் இன்று மாலை 9 நிமிடத்தில் கொண்டு சென்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் லோகநாதன், கடந்த 11ம் தேதி மதுராந்தகத்தில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தார். அடுத்த நாளே அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போதுவரை தொடர்ந்து செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டிருந்த லோகநாதனின் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
இதையடுத்து அவரது இதயம், அடையாறு தனியார் மருத்துவமனைக்குக் இன்று கொண்டு செல்லப்பட்டது. மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கு லோகநாதனின் இதயம் பொறுத்தப்படுகிறது.
ஆம்புலன்ஸ் மூலம்
மூளை செயலிழந்த நோயாளி லோகநாதன் என்பவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இதயத்தை அரசு மருத்துவமனையிலிருந்து சரியாக மாலை 6.45 மணியளவில் மலர் மருத்துவனைக்கு போக்குவரத்து காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர்.
போக்குவரத்து நிறுத்தம்
அப்போது சாலையில் போக்குவரத்தில்லாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் ஆம்புலன்சுக்கு முன்னதாக பைலட் வாகனம் சென்றது. இதன் மூலம் மிகக் குறுகிய காலத்தில் அந்த இதயம் மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பறந்த ஆம்புலன்ஸ்
வயர்லெஸ் மூலம் அடுத்தடுத்த போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் சாலையை சீர்செய்தனர்.
15 சிக்னல்கள்
ஈ.வெ.ரா. பெரியார் சாலையிலிருந்து, ராஜாஜி சாலை, காமராஜர் சாலை மற்றும் சாந்தோம் சாலை வழியாக அந்த ஆம்புலன்ஸ் சென்றது. 15 சிக்னல்களும் திறந்து வைக்கப்பட்டது.
9 நிமிடத்தில்
மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் வெற்றிகரமாக 9 நிமிடங்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அடையாறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக சென்னை சாலையில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
இதயமாற்று அறுவை சிகிச்சை
மும்பையைச் சேர்ந்த 21 வயது பெண்ணுக்கு லோகநாதனின் இதயம் அறுவை சிகிச்சை முலம் பொறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன..