மைனா படம் வில்லி மாதிரி கேட்கவேமாட்டேன்! மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கிய மயிலாடுதுறை பாய்ஸ்
மயிலாடுதுறை: கோவா, புதுச்சேரி போன்ற டிரிப்புகளுக்கு அனுப்புவேன் என ரூ 100 பத்திரத்தில் மணமகளிடம் மாப்பிள்ளையின் நண்பர்கள் கையெழுத்து வாங்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தென்பாதியை சேர்ந்த முத்துக்குமாருக்கும் பவித்ராவுக்கும் சீர்காழி அருகே திருமணம் நடந்தது. அப்போது முத்துக்குமாரின் நண்பர்கள் ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வந்தனர்.

அந்த ஒப்பந்தத்தில் முத்துக்குமார், திருமணத்திற்கு பிறகும் நண்பர்களுடன் எப்போதும் போல் சுற்றுலா செல்ல அனுமதிப்பேன் என்றும் நண்பர்களுடன் என்ஜாய் செய்வதற்கு தடையாய் இருக்க மாட்டேன் என்றும் மணப்பெண் பவித்ராவிடம் கையெழுத்து வாங்கினர்.
மைனா படம் காட்சியில் இருப்பதை போல் வெளியே செல்லும் கணவனை நிம்மதியாக இருக்க விடாமல் டார்ச்சர் செய்யக் கூடாது என்பதற்காக கையெழுத்து வாங்கியதாகவும் மணமகனின் நண்பர்கள் தெரிவித்தனர். மாப்பிள்ளைக்கு ஒரே குஷிதான்.
திருமணம் நடந்தாலே மணமகனும் சரி மணமகளும் சரி தனது நண்பர்களுடன் முன்பு போல் நேரத்தை செலவிட முடியாத நிலை உள்ளது. இதனால் இருவருக்கும் எந்த ஒரு கஷ்டம் என்றாலும் அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. மேலும் மஞ்சுமெல் பாய்ஸ் போல் சிலர் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுற்றுலா கிளம்பிவிடுவார்கள்.
இவ்வாறு குரூப்பாக போய் ஜாலியாக இருந்ததால் அடுத்த முறை ஒருவர் வராவிட்டாலும் அவர்களுக்கு ஏதோ கை உடைந்தது போல் இருக்கும். அதிலும் நண்பர்களுக்கு திருமணமாகிவிட்டால் மணப்பெண்கள், கணவன்மார்கள் தங்களுடன்தான் நேரத்தை செலவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறார்கள்.
இதனால் நண்பர்களுடன் எப்போதும் போல் நேரத்தை பேச்சுலராக செலவிட முடியவில்லை. அதனால்தான் தற்போது திருமணம் நடக்கும் நாளிலேயே நண்பர்கள் , மணப்பெண்ணிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். மயிலாடுதுறையில் நடந்தது போல் மதுரையிலும் ஒரு சம்பவம் 2022 ஆம் ஆண்டு நடந்தது.
மதுரை உசிலம்பட்டி அருகே ஹரிப்பிரசாத், பூஜா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இதில் ஹரிப்பிரசாதின் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் மணப்பெண் பூஜாவிடம், திருமணத்திற்கு பிறகும் தங்களது நண்பரை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என ரூ 20 பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
அந்த பத்திரத்தில், "பூஜா எனும் நான் சூப்பர் ஸ்டார் அணியின் கேப்டனும் எனது கணவருமான ஹரிப்பிரசாத் அவர்களை இன்று முதல் வரும் அனைத்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சூப்பர் ஸ்டார் அணிக்கு கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறேன்" என எழுதப்பட்டிருந்த பத்திரத்தில் பூஜா கையெழுத்துப் போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications