தம்பி மனைவியை வெட்டி 2 சாக்கு மூட்டைகளில் கட்டி வீசிய மைத்துனர் கைது.. மன்னார்குடி அருகே பரபரப்பு
Recommended Video

திருவாரூர்: வெளிநாட்டில் வேலை பார்க்கும் தம்பியின் மனைவியை மைத்துனர் வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவருக்கும் எஸ்தர் என்ற பெண்ணுக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு, 2 வயதில் சர்வன் என்கிற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், ஜோசப், சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். எஸ்தர் தனது குழந்தையுடன், மேலாளவந்தசேரி கிராமத்தில் வசித்து வந்தார்.

6ம் தேதி முதல் மாயம்
இந்த நிலையில், கடந்த 6ம் தேதி முதல் எஸ்தரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் குடும்பத்தார் மேலாளவந்தசேரி கிராமத்திற்கு வந்து அங்குள்ள மாதா கோவிலில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்து எஸ்தரை கண்டுபிடித்து தருமாறு உள்ளிருப்பு தர்ணா நடத்தினர்.

மைத்துனரிடம் விசாரணை
தகவல் அறிந்த ஜோசப், சொந்த ஊர் திரும்பி வந்து தேவங்குடி போலீஸ் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் பல உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். ஜோசப் ராஜசேகரின் அண்ணன் நெல்சனிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஏமாற்றிய கொலையாளி
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சொத்து பிரச்சினை காரணமாக எஸ்தரை கொலை செய்ததாக நெல்சன் ஒப்புக்கொண்டார். எஸ்தர் சடலத்தை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடல் பகுதியில் வீசியதாக நெல்சன் போலீசாரிடம் கூறினார். இதன்பிறகு நெல்சன் கூறிய இடத்தில், போலீசார், உடலை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால், எஸ்தர் உடல் கிடைக்கவில்லை.

சாக்குமூட்டை
இந்த நிலையில் நெல்சனிடம் போலீசார் மீண்டும் துருவி துருவி விசாரித்தபோது, வேறு ஒரு தகவலை அளித்தார். எஸ்தரை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி மேலாளவந்தசேரி அருகில் உள்ள காரிச்சாங்குடியில், ஆற்றங்கரையில் உள்ள புதரில் வீசியதாக கூறினார். இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் அங்கு அழைத்துச் சென்றனர்.

சொத்து தகராறு
அப்போது அங்கு உள்ள புதரில் இரண்டு சாக்கு மூட்டைகள் கிடந்தன. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த சாக்கு மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் எஸ்தரின் உடல்கள் துண்டு, துண்டாக வெட்டி மூட்டைக்குள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் அதற்குள் இருந்த எஸ்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications