தருமபுரியில் சரக்கோடு கோழிப் பண்ணை மருந்தை கலந்து குடித்த சகோதரர்கள் பரிதாப பலி!
தருமபுரி: தருமபுரியில் சரக்கோடு தண்ணீருக்கு பதிலாக மருந்தை கலந்து குடித்த சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் வெங்கடாசலம் 75 வயதானவர். இவர் கோழிப் பண்ணை நடத்தி வந்தார். இவரது தம்பி 55 வயதான ராஜா. இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு மதுகுடித்துள்ளனர்.
அப்போது, மதுவில் கலப்பதற்கு தண்ணீருக்குப் பதிலாக, கோழிப் பண்ணையில் பயன்படுத்தக்கூடிய ஒருவகை மருந்தைக் கலந்து இருவரும் குடித்துள்ளனர். இதில் மயக்கமடைந்து கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், உயர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெங்கடாசலம், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜா ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வெங்கடாசலத்தின் மனைவி சரோஜா என்பவர் அளித்த புகாரின் பேரில் அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.