என்னுடன் உல்லாசமாக இருந்ததை படம் எடுத்து மிரட்டுகிறார்: ராணுவ வீரர் மீது மனைவி புகார்
வேலூர்: மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டிய எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் உத்தரன்கோட்டையைச் சேர்ந்த வித்யா(23) என்பவர் நேற்று வேலூர் எஸ்.பி.யிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த, 2008ல் வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் என் சகோதரி அமுதா படித்தார். அவரை பார்க்க நான் அடிக்கடி வந்தபோது காட்பாடியை அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ரவியுடன்(26) காதல் ஏற்பட்டது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். என்னை ஜம்முவுக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தினார். எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தாய் வீட்டுக்கு வந்தேன்.
அங்கு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு வந்தேன். என்னுடன் வாழ முடியாது என கூறி ரவி அடித்து விரட்டி விட்டார். பஞ்சாயத்து பேசிய போது என்னுடன் உல்லாசமாக இருந்ததை எப்படியோ படம் எடுத்துள்ளார். அதை காட்டி மிரட்டுகிறார். அவரது மொபைல்போனை பார்த்த போது அதில் பல இளம் பெண்களுடன் உல்லாசமாக ரவி இருப்பது தெரிந்தது. இப்போது என்னிடம், "நான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், என்னுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன்' என, மிரட்டுகிறார். திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். பல பெண்களை மயக்கி ஏமாற்றி மோசடி செய்து வரும் என் கணவர் ரவியை கைது செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட எஸ்.பி. விஜயகுமார் இது குறித்து விசாரணை நடத்துமாறு கே.வி.குப்பம் போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில் ரவி பல கல்லூரி பெண்களை காதலித்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை படம் எடுத்து வைத்து மிரட்டி பல லட்சம் சம்பாதித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகிறார்கள்.