காளை காளை.. ஒரே நாளில் 240 காளைகள் புக்கிங்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு!
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகி வருகிறது. ஜனவரி 16ம் தேதி இங்கு உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு எனப்படும் வீர விளையாட்டு நடைபெறவுள்ளது. இதையடுத்து போட்டியில் பங்கேற்கும் காளைகளை பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
ஒரே நாளில் 230 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அலங்காநல்லூர், கோட்டை முனியசாமி திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே திடலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போட்டி நடைபெறவுள்ளது.
மதுரை.. தேனி.. திண்டுக்கல்..
ஜல்லிக்கட்டில் பங்கேற்க வழக்கம் போல இந்த ஆண்டும் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காளைகள் பங்கேற்கவுள்ளன.
வரிசையில் நின்று பதிவு
இதற்கான காளைகள் பதிவு அலங்காநல்லூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் நடந்தது. இதற்காக வந்திருந்த காளைகளின் உரிமையாளர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.
ஏகப்பட்ட டெஸ்டிங்
உச்சநீதிமன்றத்தின் சமீப கால கிடுக்கிப் பிடி உத்தரவுகள் காரணமாக பல்வேறு விதிமுறைகள் காளைகளுக்கும், போட்டிக்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் கால்நடைத் துறை மருத்துவர்களால் பரிசோதனை செய்த சான்றிதழ் மற்றும் மாடு பதிவிற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர் காளை உரிமையார்கள்.
600 காளைகள் வரை வரும்
கடந்த அண்டு 519 காளைகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 27 காளைகள் சரியில்லை என்று கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 600 காளைகள் வரை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்கன்படிதான் சாமி விடுவோம்
இந்த ஆண்டு காளைகளுக்கு டோக்கன் தரப்படும். அதன் பிரகாரம்தான் காளைகள் அவிழ்த்து விடப்படும். எனவே டோக்கன் பெற்ற அத்தனை காளைகளுக்கும் ஜல்லிக்கட்டில் களம் புக வாய்ப்பு கிடைக்கும்.
8 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 2 மணி வரை
ஜல்லிக்கட்டு, ஜனவரி 16ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும். முதலில் கோவில் காளை விடப்படும். பின்னர் வரிசையாக மற்ற காளைகள் திறந்து விடப்படும். பிற்பகல் 2 மணி வரை இடைவிடாமல் போட்டி நடைபெறும்.
போட்டிக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பிற ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.