ஸ்ரீபெரும்புதூர்: நகை, பணத்தை திருடிய 2 கொள்ளையர்கள்... அடித்துக்கொன்ற பொதுமக்கள்
சென்னை: நகை மற்றும் ரொக்கப்பணத்தைக் கொள்ளையடித்த திருடர்களை பொதுமக்களே அடித்துக் கொன்ற சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஓரகடத்தை அடுத்துள்ளது தேவரியம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முனியாண்டி. நேற்று இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தனர். முனியாண்டி வாசல் அருகில் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் முனியாண்டியின் வீட்டுக்குள் புகுந்த 3 கொள்ளையர்கள், முனியாண்டியை தாண்டிச் சென்று, பீரோ இருந்த அறைக்குள் நுழைந்தனர்.
நகை, பணம் கொள்ளை
பீரோவிற்குள் இருந்த இருந்த ரூ.3.5 லட்சம் ரொக்கப்பணம், 30 பவுன் நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்த அவர்கள், அதனை மூட்டை கட்டி தூக்கிக் கொண்டு மெதுவாக வெளியில் வந்தனர். அப்போது தூங்கிக் கொண்டிருந்த முனியாண்டியின் மனைவி தனலட்சுமியின் கழுத்தில் கிடந்த தாலி செயின் கொள்ளையர்களில் ஒருவன் கண்ணில் படவே அந்த தாலி செயினை பறித்தான். இதனால் திடுக்கிட்டு எழுந்த தனலட்சுமி கூச்சலிட்டார்.
கொள்ளையர்கள் ஓட்டம்
தனலட்சுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, கணவர் முனியாண்டி, மகன்கள் பலராமன், தெய்வசிகாமணி ஆகியோரும் திடுக்கிட்டு எழுந்தனர். சத்தம் போட்டு ஊரைக் கூட்டினர். இதனால் பயந்துபோன 3 கொள்ளையர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து முனியாண்டி குடும்பத்தினரும், ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர்.
தாக்கிய பொதுமக்கள்
ஊரே ஒன்று சேர்ந்து விரட்டுவதைப் பார்த்ததும், அதிர்ச்சியில் உறைந்து போன கொள்ளையர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். சுமார் அரை கி.மீ. தூரம் துரத்திச் சென்று 2 கொள்ளையர்களை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர். நகை-பணம் இருந்த பையை வைத்திருந்த கொள்ளையன் மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.
திருப்பி தாக்குதல்
பொது மக்கள் தாக்குதல் நடத்தியதால் சுதாரித்துக் கொண்ட 2 கொள்ளையர்களும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பொது மக்களை சரமாரியாக வெட்டினார்கள். இதில் முனியாண்டியின் மகன் பலராமன் மற்றும் தேவரியம்பாக்கம் ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆகியோருக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.
கை துண்டானது
கொள்ளையர்கள் பலமாக வெட்டியதில் கிருஷ்ணனின் கை துண்டானது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் பலராமனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் கிருஷ்ணனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொள்ளையர்கள் கொலை
தங்களை பிடிக்க முயன்ற அனைவரையுமே கொள்ளையர்கள் அரிவாளால் வெட்ட வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், வேறு வழியின்றி கொள்ளையர்கள் 2 பேர் மீதும் சரமாரியாக கற்களை எடுத்து வீசினர். உருட்டு கட்டையாலும் தாக்கினர். இதில் 2 கொள்ளையர்களுக்கும் தலை, முகம், கை, கால் மற்றும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் ஆத்திரம் அடங்காத பொது மக்கள் 2 கொள்ளையர்களையும் அடித்தே கொன்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.