விபத்தில் சிக்கிய பைக் மீது மோதிய ஆம்னி பஸ் தீப்பிடித்தது - 33 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை: சென்னையில் இருந்து மூணாறுக்குச் சென்ற ஆம்னி பஸ் ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணம் செய்த 33 பயணிகளும் உயிர் தப்பினர்.
நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மூணாறுக்கு 33 பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பஸ்சை முருகன் (30) என்பவர் ஓட்டிச் சென்றார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, ஆசனூர் தொழிற்பேட்டை அருகே சென்ற போது நடுரோட்டில் பைக் ஒன்று விபத்துக்குள்ளாகி கிடப்பதை கண்டு ஓட்டுநர் முருகன் அதிர்ச்சியடைந்தார்.
சுதாரித்து முருகன் பேருந்தை நிறுத்துவதற்கு முன் பேருந்து ரோட்டில் கிடந்த பைக் மீது மோதியது. இதில், பைக்கின் பெட்ரோல் டேங்க் தீப்பிடித்தது. பின்னர், தீ மளமளவென பேருந்துக்கும் பரவியது.
டிரைவரின் அலறல் சத்தத்தால் கண் விழித்த பயணிகள் சுதாரித்து பேருந்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக் கொண்டு வெளியே குதித்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டம் அழகநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துசாமி மனைவி ரதி (38) என்பவர் படுகாயம் அடைந்தார். சக பயணிகள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து சிதறியதால், பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பூர் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.
இதற்கிடையில் மீட்பு பணியில் ஈடுபட்ட எடைக்கல் போலீசார், விபத்தில் சிக்கிய பைக்கில் பயணம் செய்த வாலிபரை, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் செடிகளுக்கு இடையே படுகாயத்துடன் மீட்டனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி வடக்குத் தெருவை சேர்ந்த ஆண்டனி மகன் ராஜேஷ்குமார் (33) என்பதும், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
பேருந்து விபத்திற்குக் காரணமான ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications