மதுரையில் 7 நாட்களுக்குப் பின் இயல்பு நிலை திரும்பியது..பேருந்துகள் இயங்கத் தொடங்கின !
ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து மதுரையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து பேருந்துகள் இயங்கத் தொடங்கியது.
ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போரட்டம் நடத்தி வந்தனர்.

தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்கள் காட்டு தீ போல் பரவி ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. இதற்கிடையில் ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தர சட்டம் இயற்றக் கோரி கடந்த 17ந் தேதி முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் ஒரு வார காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டம் நடைபெற்று வந்த தமுக்கம், கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதியில் போக்குவரத்தும் சரிவர இயக்கப்படவில்லை. மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. ஏராளமான கடைகளும், வணிக நிறுவனங்களும் சரிவர இயங்கவில்லை. இதனிடையே மதுரை காமராஜர் பல்கலைக் கழக மாணவர்கள் மதுரை - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் இருதினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
அதேபோல் நேற்று எஸ்.வி.என் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேனி சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதையடுத்து ஆரப்பாளையத்தில் இருந்து தேனி, கம்பம், போடி செல்லும் பேருந்துகள் துவரிமான், கோச்சடை, செக்கானூரணி வழியாக இயக்கப்பட்டன. இதேபோல் பெரியார், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகளும் இந்தப் பாதையிலே இயக்கப்பட்டன. மதுரையில் சிறை வைக்கப்பட்ட நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயிலை போலீசார் மீட்டனர். இதன் பின்னர் ரயில்சேவை சீரானாது.
இந்நிலையில் தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் மாநகர காவல் துறை ஆணையாளர் சைலேஷ் யாதவ் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவர்களின் ஒரு பிரிவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மீதமுள்ள மாணவர்கள் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் இரவு எட்டரை மணியளவில் அங்கிருந்து அகற்றினர். தற்போது மதுரை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பேருந்து, ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications