எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
நெல்லை: திசையன்விளையில் எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தம் இடிந்து விழுந்ததால் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி 14வது வார்டுக்கு உள்பட்ட நந்தன்குளத்தில் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.4 லட்சம் செலவில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு வந்தது. ராதாபுரத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் இந்த பணியை கான்டிராக்ட் எடுத்து செய்து வந்தார். இந்த பஸ் நிறுத்த கட்டுமான பணிகள் முடிவடைந்து வெள்ளை அடிக்கும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அருகில் நின்று கொண்டிருந்த சிறுவர்களும், பெரியவர்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏறபடவில்லை. 3 கான்கிரீட் தூண்களின் பலத்தில் நின்ற மேற்கூரை அதிக பாரத்தால் சரிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திறப்பு விழா நடப்பதற்கு முன்பே பஸ் நிறுத்த கட்டிடம் இடிந்து விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ. நிதி முறையாக செலவிடப்பட்டதா, தரமான கட்டுமான பொருட்கள் பெறப்பட்டதா, முறையாக டெண்டர் விடப்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் முறைகேடு நடந்ததா என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.