சென்னையில் பஸ் ஸ்டிரைக் எதிரொலி.. ரயில்களுக்குப் படையெடுக்கும் மக்கள்.. அலைமோதும் கூட்டம்
சென்னை பல்லவன் இல்லம் அருகில் உள்ள டிப்போவில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரயில்களுக்குத் தாவியுள்ளனர்.
சென்னை: அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுக்க மக்கள் நடுரோட்டில் நிற்கின்றனர். சென்னையிலும் பஸ் ஸ்டிரைக் நடப்பதால், பயணிகள் ரயில் நிலையங்களை முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.அடையாறு பணிமனையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மந்தைவெளி பணிமனையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்காமல் பணிமனைக்கு பேருந்து கொண்டு செல்கின்றனர். இது குறித்து பேசிய ஓட்டுநர்கள், நாளை வேலை நிறுத்தம் என்பதால்தான், பேருந்துகளை பணிமனைக்கு கொண்டு வருவதாக அவர்கள் கூறினர்.
இன்னும் சில நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி தங்களது போராட்டங்களை துவக்கப் போவதாக போக்குவரத்து ஊழியர்கள் கூறினர். போக்குவரத்து சங்கங்களின் வேலை நிறுத்தத்தை அடுத்து, பேருந்தை இயக்க, அரசு மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
பணிமனை ஊழியர்களைக் கொண்டு, அரசு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.பேருந்துகளின் திடீர் நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் ரயில்களையும், மெட்ரோ ரயில்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ரயில்களில் பெரும் கூட்டம் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications