தமிழக - கர்நாடக எல்லைகளில் 24-வது நாளாக போக்குவரத்து முடக்கம்.. பொதுமக்கள் அவதி
ஒசூர்: காவிரி பிரச்சினை காரணமாக தொடர்ந்து 24வது நாளாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது. இரு மாநிலப் பேருந்துகளும் இயங்காததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரில் வன்முறை வெடித்தது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே தமிழக, கர்நாடக எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சரக்கு வாகனங்களும் கர்நாடகா மாநிலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 24 நாட்கள் ஆகியும் பேருந்துகள் இயக்கப்படாததால் தொடர்ந்து மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் ஜூஜூவாடி வரையும், கர்நாடகத்தில் இருந்து வரும் பேருந்துகள் அத்திபள்ளி வரையும் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் இடைப்பட்ட தூரத்தை மக்கள் நடந்தே கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்வோரும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.