வலையில் சிக்கிய அரிய வகை மீன்கள்: நாட்டு படகு மீனவர்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல்பகுதியில் நாட்டு படகு மீனவர்கள் வலையில் அரிய வகை மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மீன்களும் மிகப்பெரியவைகளாக இருப்பதால் அதிக விலை கிடைக்கும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி மே மாதம் 29ம் தேதி வரை ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல படகுகளில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. சில படகுகள் கடல் அலைகளில் இழுத்து செல்லாமல் இருக்க பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விசைப்படகுகளில் மீன்பிடி தொழில் நடக்காததால் மீன்வரத்து குறைவாக உள்ளது. மாவட்டத்தில் நாட்டு படகு மற்றும் கட்டு மரங்களில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து திரும்புகின்றனர்.
நாட்டுப்படகுகளில் மீன்பிடி
தூத்துக்குடி மாவட்டத்தில் திரேஸ்புரத்தில் அதிக அளவில் நடக்கும் இந்த தொழிலுக்கு அடுத்தபடியாக தருவைகுளத்தில் தான் அதிக அளவில் தொழில் நடக்கும். இந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் நாட்டு படகுகள், கட்டு மரங்கள், வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
நகரை, ஊழி மீன்கள்
தற்போது இந்த பகுதியில் உள்ள கடலில் நல்ல மீன்கள் அதிகமாக கிடைப்பதாக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இதில் பாலகண், மயில் மீன், பறவை மீன், முரல் மீன், மஞ்சக்கனி, வாளை மீன், நகரை, ஊழி, ஓரா, சீலா, திருக்கை வால் உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன.
நண்டுகள்
இந்த பகுதி நண்டுகளுக்கு புகழ் பெற்ற பகுதி என்பதால் தற்போது அங்கு நண்டுகளும் பிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் அரிய வகை மயில் மீன்களும் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
பெரிய மீன்கள் நல்ல விலை
இந்த மீன்கள் ஒவ்வொன்றும் சுமார் 30 முதல் 50 கிலோ வரை இருக்கின்றன. இந்த மீன்களுக்கு ஓரளவுக்கு நல்ல விலை கிடைப்பதால் அந்த பகுதி நாட்டு படகு மீனவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
தடைக்காலத்தில் மீன்கள்
மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன் வளம் பெருகி தற்போது அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.