சசிகலாவின் "சொத்து" சி.ஆர். சரஸ்வதிதான்.. அன்று அப்பல்லோ வாசலில், இன்று குளோபல் கேட்டில்!
நடராஜனை சந்திக்க வந்த சசிகலாவுக்காக குளோபல் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்தார் அதிமுகவின் சிஆர் சரஸ்வதி.
சென்னை: கணவர் நடராஜனை சந்திக்க வந்த சசிகலாவுக்காக குளோபல் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்தார் அதிமுகவின் சிஆர் சரஸ்வதி. முன்பு அப்பல்லோவில் காத்துக் கிடந்த சரஸ்வதி தற்போது குளோபல் மருத்துவமனையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சசிகலாவின் கணவர் நடராஜன் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவரை காண்பதற்காக சசிகலாவுக்கு பரோல் கிடைத்து நேற்று அவர் சென்னை வந்து சேர்ந்தார். இன்று நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் வாசலில்...
சசிகலாவின் வருகையையொட்டி அவரை காண்பதற்காக தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்தார். அவர் காத்திருந்ததைப் பார்த்தபோது ஜெயலலிதாவுக்காக அப்பல்லோவில் அவர் காத்திருந்ததுதான் நினைவுக்கு வந்தது.
கருத்து சொன்ன சரஸ்வதி
அன்று அப்பல்லோ வாசலில் காத்திருந்த சி.ஆர். சரஸ்வதி அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துகளை கூறி மக்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகினார். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். உப்புமா சாப்பிட்டார். அவர் விரைவில் போயஸ் கார்டன் திரும்புவார் என்று கூறி வந்தார்.
காவிரி நீர் ஆலோசனை
ஜெயலலிதா காவிரி நீர் விவகாரத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியாகவும் சி.ஆர்.சரஸ்வதி கூறினார். ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். இதன்பிறகு சசிகலாவுக்கு விசுவாசியாக இருந்த சி.ஆர். சரஸ்வதி தற்போது தினகரன் ஆதரவாளராக உள்ளார். இந்நிலையில் ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை, சசிகலா சொன்னதையே சொன்னோம் என்று அமைச்சர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரெட்டி கூறியதுதான்
இதுகுறித்து சி.ஆர்.சரஸ்வதியிடம் கேட்டபோது ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது நான் கூறவில்லை. அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு, அவர் என்ன உணவு உட்கொண்டார் என்று மருத்துவர்கள் என்ன கூறினார்களோ அதைத்தான் நானும் கூறினேன் என்று ஒரே போடாக போட்டார்.
இன்று குளோபல் வாசலில்
அன்று அம்மாவுக்காக அப்பல்லோ வாசலில் காத்திருந்த சி.ஆர்.சரஸ்வதி, இன்று சசிகலாவுக்காக குளோபல் மருத்துவமனையில் அசராமல் காத்து கிடந்தார். இன்று வரை நெட்டிசன்களுக்கு மீம்ஸ்கள் கிடைக்க பஞ்சமில்லாத நிலையை ஏற்படுத்தியவர் சரஸ்வதி. அதேசமயம், முப்பெரும் தேவியர்களில் கோகுல இந்திராவும், வளர்மதியும் எடப்பாடி அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரஸ்வதி மட்டும்தான் தொடர்ந்து சசிகலாவுக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.
சசிகலா சேர்த்த நிஜ "சொத்து" சிஆர் சரஸ்வதியும், நாஞ்சில் சம்பத்தும் என்று கூட சொல்லலாம்.