போகிற இடத்திலாவது விசுவாசமாக இருங்கள்.. நிர்மலாவுக்கு சி.ஆர்.சரஸ்வதி அட்வைஸ் !
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து நிர்மலா பெரியசாமி ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.
சென்னை: போகிற இடத்திலாவது விசுவாசமாக இருங்கள் என்று நிர்மலா பெரியசாமிக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பி.எஸ் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பையும் தொடங்கி நாங்கள் தான் உண்மையான அதிமுக எனவும் கூறிவருகிறார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
இந்நிலையில் சசிகலா தரப்பு அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. சசிகலா தரப்பு அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது நிர்மலா பெரிசாமி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசியுள்ளார். இதற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் சிஆர்.சரஸ்வதி, நிர்மலா பெரியசாமியை கடுமையாக திட்டியுள்ளனர். குண்டுக்கல்யாணம், சிஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். கட்சியில் இருந்து வெளியே போகுமாறும் கூறியுள்ளனர்.இதையடுத்து நிர்மலா பெரியசாமி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைப்பேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது போலியான அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற நல்லவர்களுடன் சேரப்போவதாக அவர் கூறினார். இதையடுத்து இன்று மாலை ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார் நிர்மலா பெரியசாமி.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி போகிற இடத்திலாவது விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.