கன மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சி.ஏ தேர்வு ஒத்திவைப்பு
சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் இன்று நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு (பட்டையக் கணக்காளர்) ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்து வருகிறது. கனமழை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் இன்று நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

கனமழையின் காரணமாக ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து இயல்புநிலை பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் இன்று நடைபெற இருந்த சி.ஏ ஃபைனல் குரூப்-2 மறைமுக வரிகள் (8-வது பேப்பர்) தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், புதுச்சேரி, கும்பகோணம், திருச்சி, மதுரை, சிவகாசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களிலும், ஆந்திராவில் நெல்லூர், திருப்பதி, ஓங்கோல், குண்டூர், விஜயவாடா, காக்கிநாடா, ராஜமுந்திரி மற்றும் விசாகப்பட்டணம் ஆகிய நகரங்களில் நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வானது ஏற்கனவே அறிவித்தபடி வரும் 26-ம் தேதி நடைபெறும் என ஐசிஏஐ அறிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications