முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்களை நேரில் சந்திக்காத ஜெ.- 'இண்டர்காமில்' மட்டுமே ஆலோசனை!!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதில் அவசரம் காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 19 அமைச்சர்களுடன் ஜெயலலிதா நேரில் ஆலோசனை நடத்தாமல் இண்டர்காமில் மட்டுமே பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பால் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று நாள்தோறும் கூறப்படுகிறது.

ஆனால் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 19 அமைச்சர்கள் நேற்று முகாமிட்டிருந்தனர்.
போயஸ் கார்டனுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று மாலை 3.30 மணிக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி என அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஜெயலலிதா வீட்டுக்குள் சென்றனர். அனைவருடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
ஆனால் பன்னீர்செல்வம் உட்பட எவரையுமே ஜெயலலிதா நேரில் சந்திக்கவில்லை என்கிறது போயஸ் தோட்ட வட்டாரங்கள்.. பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களுடனும் இண்டர்காம் மூலம் மட்டுமே ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது ஜெயலலிதாவின் குரல் சற்று தளர்ந்திருந்ததாகவும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் பெயர் வெளியிட விரும்பாத அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் நாள்தோறும் ஜெயலலிதாவை சந்திக்க தொழிலதிபர்கள், பிரமுகர்கள் பலரும் முயற்சித்தாலும் காத்திருங்கள் என்ற பதில்தான் போயஸ் தோட்ட ஊழியர்களிடம் இருந்து வருகிறதாம்...
அம்மா எப்போ ரிட்டர்ன்ஸ்?












Click it and Unblock the Notifications