புலிகளைக் கண்காணிக்க வைத்த 6 கேமராக்கள் மிஸ்ஸிங்- கலக்கத்தில் வனத்துறையினர்
நெல்லை: களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகத்தில் வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 6 கேமராக்கள் ஓரே மாதத்தில் காணாமல் போனதால் வனத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், புலிகள் கணக்கெடுப்புக்கு பயன்படும் வகையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் சில மாதங்களாக இந்த கண்காணிப்பு கேமராக்கள் மாயமாகி வருகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாஞ்சோலை பகுதியில் 2 கேமராக்களும், பாபநாசம் பகுதியில் 2 கேமராக்களும் மாயமாகின.
இந்த நிலையில் தற்போது மாஞ்சோலை வனப்பகுதியில் குதிரை வெட்டி அருகே உள்ள நான்கு முக்கு ரோடு அருகே மேலும் இரண்டு கேமராக்கள் மாயமாகியுள்ளன.
ஏற்கனவே மாயமான கேமராக்களை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். தற்போது மேலும் இரண்டு மாயமாகியுள்ளது வனத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வனப்பகுதியில் கேமராக்களை வைத்து விட்டால் வேலை முடிந்தது என்று இருந்து விடாமல் தொடர்ந்து அதனை கண்காணித்து வந்தால்தான் கேமராக்களை யார் எடுத்தாலும் தெரியும்.
ஒருவேளை வனவிலங்குகள் தள்ளி விட்டது என்றால் கேமராக்கள் கீழே விழுந்து கிடக்கும் மாயமாகாது. எனவே வனத்துறையினர் ரோந்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.