ஆர்.கே.நகர் தொகுதியில் ஓய்ந்தது பிரசாரம்! 'நடையைக் கட்டிய' வெளியூர்வாசிகள்!!
சென்னை : சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அத்தொகுதியில் தங்கியிருந்த வெளியூர்நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 26-ந்தேதி வெளியானது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மகேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் சுயேட்சைகள் உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரு நாட்களுக்கு முன் பிரச்சாரம் செய்தார். இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட மற்ற வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை ஆதரித்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் தொண்டர்களும் வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்துவிட்டது. இதனால் தேர்தல் பிரச்சாரத்துக்காக வெளியூரில் இருந்து வந்திருந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேறினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், விடுதிகளில் வெளியாட்கள் யாரும் தங்கி இருக்கக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
தற்போது முதல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உள்பட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாக்குச் சாவடிகளை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நாளை மறுநாள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் 30-ந்தேதி எண்ணப்படுகின்றன.
வாக்குப் பதிவையொட்டி இன்று மாலை 5 மணி முதல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். வாக்குப் பதிவு நடைபெறும் 27-ந்தேதி நள்ளிரவு வரை மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும். வாக்குகள் எண்ணப்படும் 30-ந்தேதியும் மதுக்கடைகள் - பார்கள் மூடப்பட்டிருக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications