சூடு பிடிக்கும் ஸ்ரீரங்கம்.... குவிந்தனர் அமைச்சர்கள்.. குஷியான பிரசாரத்தில் அதிமுக!
திருச்சி: முக்கியவேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தில் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி, 13ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வளர்மதி, கடந்த, 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர். அதிமுகவினரின் பிரசாரமும் தொடங்கியது.
இடையில், இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின், இன்று நடைபெறவுள்ள அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற் பின்னர் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் வேட்பாளர் வளர்மதி.
வளர்மதியை ஆதரித்து, இன்று காலை, 10.30 மணிக்கு, வயலூரில், அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது.இதில், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள்,எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சி நடந்த இடமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. தமிழக அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளதால் களமும் சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ளது.
கவனிப்பு பலமாக இருக்கும்போது களம் சூடாகத்தானே இருக்கும்!