ஓய்ந்தது ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரம்... 4ம் தேதி வாக்குப் பதிவு
ஏற்காடு: ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொகுதியில் பிரசாரத்திற்காக முகாமிட்டிருந்த வெளி மாவட்டத்தினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஏற்காடு இடைத்தேர்தல் வரும் 4-ந் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வெளிமாவட்டத்தைச் சேர்த்தவர்கள் ஏற்காடு தொகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என ஆட்சியர் மகரபூஷணம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 33 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்காடு இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு வரும் 4-ந் தேதி மாவட்டத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு 290 வாக்கு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொகுதி முழுவதும் 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் துணை ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.












Click it and Unblock the Notifications