என்னை மாதிரி கையை நீட்டி, நாக்கை துருத்தி ஜெ.வை கேள்வி கேட்க முடியுமா?: விஜயகாந்த்
திருவாரூர்: சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் வரிசையில் அமர்ந்து என்னை மாதிரி கையை நீட்டி, நாக்கை துருத்தி முதல்வரை கேள்வி கேட்கும் தகுதி யாருக்காவது உள்ளதா? என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் வாங்கிக் கொடுக்காத தமிழக அரசை கண்டித்து திருவாரூரில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

ஊழல் புரட்சி
தமிழகத்தில் ஒன்றும் வேளாண் புரட்சியோ, பசுமை புரட்சியோ நடக்கவில்லை. மாறாக ஊழல் புரட்சி தான் நடந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அதிமுக அமைச்சர்கள் காவடி தூக்கி, மண் சோறு சாப்பிட்டு, மொட்டை அடித்தனர். அவர்கள் விவசாயத்திற்காகவோ, விவசாயிகளுக்காகவோ எதையும் செய்தது இல்லை.

ஜெயலலிதா
டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் வாங்கிக் கொடுக்க முடியாத ஜெயலலிதா தான் தமிழக முதல்வராக உள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குறைந்த அளவு வாக்குகளே பதிவாகியுள்ளது. அதில் இருந்தே மக்கள் ஜெயலலிதா மீது எவ்வளவு வெறுப்பில் உள்ளார்கள் என்பது தெரியவில்லையா?.

நாக்கை துருத்தி
சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் வரிசையில் அமர்ந்து என்னை மாதிரி கையை நீட்டி, நாக்கை துருத்தி முதல்வரை கேள்வி கேட்கும் தகுதி யாருக்காவது உள்ளதா? அப்படி கேள்வி கேட்டிருந்தால் இந்தளவுக்கு ஊழல் நடந்திருக்குமா?

அதிமுக அரசு
ஊழல் பணத்தை விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்திருந்தால் அவர்கள் யாரும் தற்கொலை செய்ய மாட்டார்கள். விவசாயிகளின் நலனை காக்காத இந்த அதிமுக அரசை 2016ம் ஆண்டு தேர்தலில் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications