ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.கவின் வியூகம் என்ன? - மு.க.ஸ்டாலின் பேட்டி
ராமநாதபுரம்: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பின்னரே, அதில் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என கூறப்படும் எனத் தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான ஸ்டாலின் சந்திப்பு, பாமக நிறுவனர் ராமதாஸுடனான திமுக தலைவர் கருணாநிதியின் சந்திப்பு மூலம் தமிழக அரசியல் கூட்டணியில் புதிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஆனால், வைகோவுடனான சந்திப்பு அரசியல் நாகரீகம் கருதி நடந்தது. தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. அதனை தேர்தல் நேரத்தில்தான் சொல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12.20 மணிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :-
குருபூஜை...
தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி குருபூஜையின்போது மரியாதை செலுத்த தவறுவதில்லை. தி.மு.க. ஆட்சி காலத்தில் முத்துராமலிங்கதேவர் பெயரில் 3 கல்லூரிகள், நினைவு இல்லம் போன்றவை உருவாக்கப்பட்டன.
வழக்குகள் வாபஸ்...
13 அடி உயர வெண்கல சிலை உள்பட 13 பணிகள் நடைபெற்றன. தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 97-ம் ஆண்டு கலவரம் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.
வைகோவுடனான சந்திப்பு...
தேவரினத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் தி.மு.க.தான் அறிவித்தது. வைகோவுடனான சந்திப்பு அரசியல் நாகரீகம் கருதி நடந்தது. தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. அதனை தேர்தல் நேரத்தில்தான் சொல்லி முடியும்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்...
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாக வில்லை. அந்த அறிவிப்பு வெளியான பின்னர் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிவிக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.