காங். விருப்ப மனுத் தாக்கல் தொடக்கம்... திமுகவுடன் கூட்டணிக்கு தீவிரம்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்பமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் ஆயத்த வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே, அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்களை பெற்று விட்டன.
இந்நிலையில், காங்கிரஸ் இன்று விருப்பமனு விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. இன்று முதல் வரும் 15ம் தேதி வரை விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுக்களை சத்தியமூர்த்தி பவனில் ரூ. 100 கொடுத்து தொண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ. 5,000மும், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவர்கள் மற்றும் பெண்கள் ரூ. 2500ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இந்தத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயன்று வருகிறது. பாஜக பக்கமாக திமுக போய்விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் காங்கிரசுக்கு இருந்தாலும் எப்படியும் திமுக- தேமுதிக- காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கிவிடலாம் என்ற நப்பாசையில் உள்ளது.
தேமுதிக வேறு முடிவை எடுத்தால், தங்களுக்கு ஒரே ஆபத்பாந்தவன் திமுக தான் என்பதால் எப்படியும் கூட்டணி அமைத்துவிடுவதில் தீவிரமாக உள்ளது காங்கிரஸ்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் நாளை மறுநாள் சென்னை வந்து திமுகத் தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பாடுபட இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.