போச்சே போச்சே.. ரூ. 3 லட்சம் போச்சே: உள்ளாட்சி தேர்தல் தடையால் புலம்பும் வேட்பாளர்கள்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள்முதல் வேட்புமனு தாக்கல் செய்த நாள் வரை லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்த வேட்பாளர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட தமிழகம் முழுவதும் மொத் தம் 1,31,794 பதவிகளுக்கு 4,97,840 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் இந்த முறை நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால் அதிமுக, திமுகவில் தலைவர் பதவிக்காக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கவுன்சிலர் தேர்லில் வேட்பாளராக களம் இறங்கினர்.
அதிமுக, திமுக வேட்பாளர்கள், முக்கிய கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முதல் பிரச்சாரம், ஊர்வலம் என கடந்த ஒரு வாரமாக கட்சியினரையும், வாக்காளர்களையும் கவர பணத்தை தண்ணீராக செலவழித்துள்ளனர்.
லட்சக்கணக்கில் செலவு
ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கிராம முக்கிய பிரபலங்கள், மாநகராட்சி வேட்பாளர்களைவிட அதிகமாக செலவு செய்துள்ளனர். பிரியாணி முதல் மதுபாட்டில் வரை பணத்தை தண்ணீராக செலவு செய்து ஆதரவை திரட்டி வைத்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்த நாளில் மட்டும் சில லட்சங்களை செலவு செய்ததாக கூறுகிறது புள்ளி விபரம்.
உள்ளாட்சி தேர்தல் ரத்து
இந்நிலையில் நேற்று திடீரென சென்னை உயர் நீதிமன்றம் உள் ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தது. உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் தற்போது வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக, திமுக வேட்பார்கள் மற்றும் அதிக அளவில் பணம் செலவழித்த வேட்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டாட்டம் - கொண்டாட்டம்
மீண்டும் வாய்ப்பு கிடைத்தா லும், கிடைக்காவிட்டாலும் இது வரை தேர்தலுக்காக பல லட்ச ரூபாய் செலவு செய்ததால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரத்தில் சீட் கிடைக்காமல் விரக்தியில் இருந்த அதிமுக, திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிலரோ உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
லட்சக்கணக்கில் செலவு
இதுகுறித்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் சிலர் வேதனையுடன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். வேட்பாளராக அறிவித்த நாள் முதல் தற்போது வரை சில லட்சங்களை செலவு செய்துள்ளோம். சீட் வாங்கவே சில லட்சங்களைக் கொடுத்துள்ளோம். பணத்தை இழந்ததற்காக வருத்தப்படவில்லை என்றாலும், மீண்டும் இதே வார்டு கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பது சிலரது கவலை.
செலவு செய்யவேண்டும்
தேர்தல் அறிவிக்கப்பட்டு வாய்ப்பு கொடுத்தாலும், தற்போது செலவு செய்தது போல் மீண்டும் செலவு ஏற்படும் என்று கூறுகின்றனர். எனவே தேர்தல் அறிவிக்கும் வரைக்கு எங்காவது தலைமறைவாக போய் விடலாமா என்றும் யோசிக்கின்றனர் சிலர். அதே நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மறுபடியும் முதல்ல இருந்து செலவு செய்ய வேண்டும் என்பதே இவர்களின் கவலையாக உள்ளது.