தேமுதிகவின் முரசு சின்னத்திற்கு எதிரான மனு... ஹைகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு
சென்னை: தேர்தல் ஆணையம் தேமுதிகவிற்கு முரசு சின்னத்தை ஒதுக்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த முரளிமோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர், ‘தேமுதிகவிற்கு ‘முரசு' சின்னத்தை தேர்தல் சின்னமாக இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதை சின்னமாக கருத முடியாது. முரசு என்பது ஒரு தாளவாத்தியம். அதை நகரா என்று அழைக்கப்படுகிறது. நான் திருப்பூரில் முரசு ஆயத்த ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறேன். அதற்காக முரசு சின்னத்துடன் வணிக குறியீடு பதிவு செய்துள்ளேன். தற்போது, தே.மு.தி.க.விற்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், நான் நடத்தி வரும் தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதை பொதுநலன் மனுவாக கருத முகாந்திரம் இல்லை. எனவே, மனுதாரருக்கு வழக்கு செலவு விதிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனால் தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார். அதனைத் தொடர்ந்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications