”இனி டென்ஷன் வேண்டாம்”- பிரகாஷ் ராஜ்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை: சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றில் நடித்ததற்காக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் விளம்பரதாரர்களையும் மனுதாரர்களாக சேர்க்காத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் பிரகாஷ்ராஜ் நகைக் கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதில், திருமண வயதில் உள்ள பெண்களால் தந்தைகளுக்கு "டென்ஷன்" என்று வசனம் இடம்பெற்றுள்ளது. இது, பெண் பிள்ளைகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. எனவே, இந்த விளம்பரத்தை ஊடகங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும்.
மேலும், இது தொடர்பான விளம்பரப் பலகைகளை அகற்றவும், பெண்களை இழிவுபடுத்திய பிரகாஷ்ராஜ், சம்பந்தப்பட்ட நகைக் கடை நிர்வாகம் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘'இந்த வழக்கை தொடர்வதற்கு முன்பு, விளம்பரத்தை தயாரித்து வெளியிட்ட விளம்பர நிறுவனம், நகைக் கடை நிர்வாகம் ஆகியோருக்கு மனுதாரர் நோட்டீஸ் அனுப்பவில்லை.
அவர்களை எதிர்மனுதாரர்களாகவும் சேர்க்கவில்லை. நடிகர் என்பதால் பிரகாஷ்ராஜ் மட்டும் இந்த வழக்கில் முதல் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ளார்'' என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.